கர்நாடகா, பால்முரி அகஸ்தீஸ்வர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜ சோழனின் கன்னட மொழியிலான கல்வெட்டு முக்கியமான ஒன்று. ராஜராஜனின் 28வது ஆட்சிக்காலத்தில் கோவிலுக்கு நைவேத்தியக் கட்டளை ஒன்று ஏற்படுத்தப்பட்டதை இந்தக் கல்வெட்டு குறிக்கிறது. ராஜராஜனின் வெற்றிகளை முதலில் பட்டியலிட்டுவிட்டு
பஞ்சவன் மஹாராயன் என்பவருக்கு வேங்கி &கங்கை மண்டலத்திற்கான மாதண்டநாயகர் பதவி வழங்கப்பட்டதையும் தெரிவிக்கிறது.இந்தப் பஞ்சவன் மஹாராயன் வேறு யாருமில்லை, ராஜேந்திர சோழன் தான். இதே வருடத்தில் தான் ராஜேந்திரருக்கு இளவரசுப் பட்டமும் சூட்டப்பட்டது.இக்கல்வெட்டுதரும் அடுத்த முக்கியச் செய்தி
கட்டளை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு ‘சகவருஷ 934 நேய பரிதாவி ஸம்வத்ஸரகே’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பிரபவ முதலான ஆண்டுகளை தமிழ்மன்னர்கள் பயன்படுத்திவந்திருக்கிறார்கள் என்பதை இந்தப் ‘பரிதாபி’ ஆண்டுக்குறிப்பு உறுதிசெய்கிறது.
ஆக ராஜராஜன் காலத்திலேயே இந்த ஆண்டுப்பெயர்கள் பயன்பாட்டில் இருந்தன என்று இந்தப் பால்முரிக் கல்வெட்டு மூலம் தெளிவாகத் தெரிகிறது. தமிழ்ப் புத்தாண்டும் இதை ஒட்டி சித்திரையிலிருந்தே கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்பதும் தெளிவு.